ஞாயிறு, 10 ஜனவரி, 2016

வல்லமை புகைப்பட போட்டி--46

கள்ளமற்ற வெள்ளை உள்ளம் பிள்ளைகளுடையது. அவர்களால் மட்டுமே சிறிய விஷயங்களில்கூடப் பெரிய இன்பத்தைக் காணமுடிகின்றது. தம் மனத்தைத் துயரின்றிப் பேணமுடிகின்றது. இந்தக்கலையை பெரியவர்களும் கற்றால் ’பேராசை’ எனும் வார்த்தையே வையத்தில் வழக்கொழிந்து போகுமே!
”இதோ ஒரு சிறுவன் உடைந்த ஆசனத்தையும் அரியாசனமாய் எண்ணி ஆடுகின்றான்! முகத்தில் மகிழ்ச்சியோ கரைபுரண்டு ஓடுகின்றது. அவன் ஊசலை உந்தி முன்னேறுவது போலவே நாமும் வாழ்வில் உந்துதலோடு முயன்றால் அனைவரையும் முந்தலாம் என்கிறது ஒரு கவிதை; தருகிறது மனத் தெளிவை!
போகி யால்
யாரோ போக்கிய
உடைந்த ஊஞ்சல்
பழைய இரும்பு
எடுப்பவனிடம் சிக்கப்
பழசானாலும்
புதிதாய்த் தெரிந்தது
அவன் மகனுக்கு
அடுத்த நாளே அதை
அரசு கட்டிலாக்கி
அரியணனை ஏறினான்
ஆனந்தமாய் வீசிவீசிஆட
தூசியாய் தெரிந்தது துயரம்
மகனின் உல்லாசம்
பெற்றவனையும்
தொற்றிக்கொண்டது
சுடுபட்ட வாழ்க்கை
விடு பட்டதுபோல்
ஊஞ்சல் ஆட்டம்
உல்லாசமானதுதான்
சிதறிக்கிடக்கும்
சீர் கெட்டவாழ்க்கை
உதறி உந்தி உந்தி ஆடி
உவகை அடைந்தான்
கிடைப்பதைக் கொண்டு
திருப்திப்படும் வாழ்க்கை
புரிந்து சகித்து
பொருந்தியே வாழும்
பாடம் எல்லோருக்கும்
பொருந்தும்தானே!

’கிடைப்பதில் நிறைவாய் வாழ்வதே வாழ்க்கை’ என்று முத்தாய்ப்பாய்த் தன் கவிதையை முடித்திருக்கும்  திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

2 கருத்துகள்: