திங்கள், 30 மே, 2016

வல்லமை புகைப்படபோட்டி-65

இந்த வாரத்தின் சிறந்த கவிதையாக என் கவிதையை தேந்தெடுத்த திருமதி மேகலாராம மூர்த்திக்கும் வல்லமை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
காகமே உன்
தாகம் தீர்க்க
தண்ணீரும்
பசிக்கு அன்னமும் இட்டேன்
நீ சனீஸ்வரரின் வாகனமாம்
முன்னோர்களின் சின்னமாம்
நீ கரைந்தால்
விருந்தினர் வருவதாகவும்
நீ வலமாகப் போனால்
காரிய சித்தியாகவும்
உன்னைப்புகழ்ந்து
பாடியிருக்காராம்
காக்கைப்பாடினியார்
இதெல்லாம் எனக்கு
செவிவழி வந்த செய்திதான்
ஒற்றுமைக்கும்
பகிர்ந்துணவுக்கும்
கூடி வாழ்தலுக்கும்
உவமையாகச் சொன்ன
உண்மைத்தகவலுக்காகவும்
உயிர்களுக்கு உதவணும்னுதான்
தண்ணீரும்
அன்னமும் இட்டேன்                                                                                                    
அதனால்தான் உன் பகிர்ந்துணர்வைக் காட்ட
கடையிலிருந்தோ சிறுவர்
கையிலிருந்தோ
இதை பறித்து வந்திருக்கிறாயோ?
வேண்டாம் காகமே!
பறித்து வருவதும்
கவர்ந்து வருவதும் கூட
ஒரு வகையில் திருட்டுத்தானே?
எனக்கு இது வேண்டாம்!
அம்மா திட்டுவாள்
உன் அன்புக்கு நன்றி!

காக்கை குறித்த பல செவிவழிச் செய்திகளைத் தன் கவிதை வாயிலாய் நமக்கு அறியத்தந்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே

திங்கள், 9 மே, 2016

ஒரு கவிஞனின் கனவு 8-5-2016


08/05/2016
இன்றைய ‪#‎சிறந்த_ஹைக்கூ_கவிதையின்‬ வெற்றியாளர். சரஸ்வதி ராஜேந்திரன் அவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤
எல்லா வலிகளும்
ஞாபகப்படுத்துவது
அம்மா
.
சரஸ்வதி ராஜேந்திரன்

வல்லமை புகைப்படபோட்டி -62 8-5-2016

 வல்லமை புகைப்பட போட்டி 62ல் என் கவிதையை சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்மேகலா ராமமூர்த்திக்கும் வல்லமை குழுவிற்கும் என் மன மார்ந்த நன்றிகள்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று குறள் வடித்தார் வள்ளுவப் பேராசான். ஆனால் காலணியின்றித் தம் மெல்லடிகளில் கொப்புளங்கள் வருமளவிற்கு உப்பளங்களில் உழைக்கும் இப்பாவையரின் துயர் நம் கண்களில் நீரை வடியவைக்கின்றது அல்லவா?
நல்குரவென்னும் இடும்பையால் பல்வகைத் துன்பங்களையும் அயராது அனுபவிக்கும் இப்பெண்மணிகளின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்; துன்பங்கள் அவர்தம் வாழ்வினின்றும் கடந்து போகவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் கவிதையொன்று…
ராமன் ஆண்டாலென்ன
ராவணன் ஆண்டாலென்ன
ராப்பகல் பாராமல் காலில்
கொப்பளம் வந்தாலும் பொருட்படுத்தாது
உப்பளத்திலிருந்து உப்பைச் சுமந்து சுமந்து
சுமைதாங்கியாய்ப் போனாலும்
அசரவில்லை என்றும் அதனால்
உசரவும் இல்லை வாழ்க்கைமுறை
இலவசமாய்க் கிடைக்கும் மிக்ஸியும்
இலவசமாய்க் கிடைக்கும் செல்போனும்
இன்னபிற சாமான்களும் வந்து
என்ன உபயோகம்?
அதை இயக்க காசு வேண்டாமா ?
வயிற்றில் ஈரத்துணியை க்கட்டிக்கொண்டு
ஓரமாய் அமர்ந்தால் பசி போகுமா?
பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு போடுமா இலவசங்கள்?
கற்ற (அரசியல்) வித்தை காட்டி
உற்றவர்களும், உறவுகளும்
உல்லாசத்தை அனுபவிக்க
உழைப்பாளிகள் வெயிலோடும் மழையோடும்
வறுமையோடும் என்று மாறுமோ இந்த நிலை என்று
பொறுமை காக்கின்றனர் இதுவும் கடந்து போகுமென்று!
அரசாங்கம் அளிக்கும் இலவசங்களான மிக்ஸியும், செல்போனும் ஏழைமக்களின் வயிற்றுப்பசிக்கு உணவாகா; உழைப்பு ஒன்றே அவர்களின் பசிப்பணி தீர்க்கும் அருமருந்து என்பதைத் தன் கவிதையில் இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

செவ்வாய், 3 மே, 2016

ஒரு கவிஞனின் கனவு --3-5-2016

03/05/2016
இன்றைய ‪#‎சிறந்த_சென்ட்ரியூ_கவிதையின்‬ வெற்றியாளர். சரஸ்வதி ராஜேந்திரன், அவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤x
இலவசத்தால் ஈர்க்கப்பட்டு
தூண்டிலில் மாட்டியது
மீன்
.
சரஸ்வதிராசேந்திரன்